○தமிழ் காக்க புறப்பட்ட சூரியன்!!!
☆▪☆▪☆▪☆▪☆▪☆▪☆▪☆▪☆▪☆
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே,
கம்பரையும், வள்ளுவரையும்
படிப்பார் யாருமில்லையா ?
என மூவேந்தர்களுக்குப்பிறகு தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பே இல்லாமல், 1381 ஆண்டுகள் கடந்தன. இதன் விளைவு, தமிழ் மொழியின் வளமும், பொலிவும் குன்றத் தொடங்கியது. வட மொழி வளரத் தொடங்கியது. தமிழும் வடமொழிச் சொற்களும் கலந்து பேசும் மணிப் பிரவாள நடையே பேச்சு மொழியாக மாறியது. மெத்தப் படித்தவர்கள் கூட தமிழுடன் வடமொழியினையும் கலந்து பேசுவதையே பெருமையாக எண்ணிப் போற்றிய காலம் அது.
அக்காலத்தே, தமிழின் தலையெழுத்தை மாற்ற ஒருவர் தோன்றினார். அவர்தான் சேது நாட்டு செம்பியர் குடித்தோன்றல் பாலவநத்தத்தின் அரசர் "வள்ளல் பாண்டித்துரைத் தேவராவார்."...
மதுரைத் தமிழ்ச் சங்கம்!
×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் வளர்க்க புறப்பட்ட புயல் அரசர் பாண்டித் துரைத் தேவரவர்கள், தமிழை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர். கவி புனையும் ஆற்றல் படைத்தவர். கம்பராமாயணம், காஞ்சி புராணம், தனிகை புராணம் முதலான புராணங்களையும், சைவ சமய நூல்களையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்.
1901 ஆம் ஆண்டில் பாண்டித் துரை தேவர் அவர்கள் மதுரையில் சில காலம் தங்கியிருந்தார். சொற்பொழிவாற்றுவதில் மிகுந்த வல்லமை படைத்த பாண்டித் துரை தேவரின், சொற்பொழிவினைக் கேட்க மதுரை மக்கள் விரும்பினர். தேவரும் சொற்பொழிவாற்ற இசைந்தார்.
பாண்டித் துரை தேவர் அவர்கள், தனது சொற்பொழிவின் போது, கம்பராமாயணத்தில் இருந்தும், திருக்குறளில் இருந்தும், சில பாடல்களை மேற்கோள் காட்டிப் பேச விரும்பினார். இராமாநாத புரத்திலிருந்து மதுரைக்கு வரும்பொழுது, நூல்கள் எதனையும் எடுத்துவராத காரணத்தால், மதுரையில் உள்ளவர்களிடமிருந்து, இவ்விரண்டு நூல்களையும் பெற்று வருமாறு, தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
உதவியாளர்கள் பல நாட்கள் முயன்றனர். பலரிடமும் கேட்டனர். ஆனால் இல்லை, இல்லை என்ற பதிலே கிடைத்தது. ஒருவரிடம் கூட இந்நூல்கள் இல்லை. பாண்டித்துரை தேவரின் நெஞ்சம் கலங்கியது சங்கம் வைத்துத் .தமிழ் வளர்த்த மதுரையில் கம்பரையும், வள்ளுவரையும் படிப்பார் யாருமில்லையா என மனம் குமுறினார்.
இம்மாபெரும் குறையினைப் போக்க, தமிழினைக் காக்க, வளர்க்க ஏதாவது செய்தே ஆக வேண்டும் . இந்த இழி நிலையினை மாற்றியே தீர வேண்டும் என அன்றே உறுதியெடுத்தார்.
இதன் விளைவாக, பாண்டித் துரை தேவர் அவர்களின் பெரும் முயற்சியினால், 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14 ஆம் நாளன்று, மதுரைத் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது. தமிழ் மக்களிடையே தமிழுணர்ச்சிப் பரவ, இச்சங்கம் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்.
மதுரைத் தமிழ்ச் சங்கமானது, பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என மூன்றுத் தேர்வுகளை நடத்தி, தமிழாய்ந்த புலவர்களை உருவாக்கத் தொடங்கியது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மகத்தான பணி தமிழ் நாடெங்கும் பரவத் தொடங்கியது. தமிழகத்தின் அனைத்துப் பகுதியினரிடமும் தமிழ் உணர்ச்சியைத் தழைக்கச் செய்தது. இதன் பயனாக ஒவ்வொரு ஊரிலும், தமிழ்ச் சங்கங்கள் தோன்றலாயின. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவானது, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடப் பட்டது.
தஞ்சைத் தமிழ்ச் சங்கம்
×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா, தஞ்சை நகரில் சிறப்புறக் கொண்டாடப் பெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழன்பர்கள் பலருக்கும் ஓர் எண்ணம் தோன்றியது. தஞ்சையில் ஓர் தமிழ்ச் சங்கம் தொடங்கினால் என்ன? என்பதே அவ்வெண்ணமாகும்.
இதன் பயனாக "•பாப்பாநாடு ஜமீன்தார் சாமிநாத விசய தேவர்"•அவர்களைத் தலைவராகவும், இராசம் அய்யங்கார் அவர்களைத் அமைச்சராகவும், பண்டித உலகநாத பிள்ளை முதலானோரை உறுப்பினர்களாகக் கொண்டு "தஞ்சைத் தமிழ்ச் சங்கம்" தொடங்கப் பெற்றது. இச்சங்கத்தின் சார்பில் தமிழகம் என்னும் இதழும் வெளியிடப் பெற்றது.
அனால் இச்சங்கம் நீடித்து நிலைக்கவில்லை. தோன்றிய சில ஆண்டுகளிலேயே மறைந்து போயிற்று. தஞ்சைத் தமிழ்ச் சங்கம் மறைந்தாலும், தஞ்சை வாழ் மனதில் தமிழ்ச் சங்கம் பற்றிய ஏக்கம் இருந்து கொண்டேயிருந்தது.
வித்தியா நிகேதனம்
×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×
தஞ்சை தூய பேதுரு கல்லூரியில் விசுவலிங்கம் பிள்ளை என்பார் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். அவருடைய மகன் புலவர் வி. சாமிநாத பிள்ளை என்பவராவார். இவரும், தமிழ் இலக்கண இலக்கியங்களில் பெரும் புலமை பெற்று விளங்கிய, இலக்கணக் கடல் அரசஞ் சண்முகநாரும் நெருங்கிய நண்பர்கள்.
1909 ஆம் ஆண்டு வாக்கில் அரசஞ் சண்முகனார், தனது தொல்காப்பிய பாயிரவிருத்தி என்னும் நூலை அச்சிடும் பொருட்டு, சில காலம் தஞ்சையில் தங்கியிருந்தார். அவ்வமயம் அரசஞ் சண்முகனாரின் தூண்டுதலினாலும், புலவர் சாமிநாத பிள்ளை போன்றோரின் முயற்சியினாலும், ஒரு தமிழ்ச் சங்கம் தோற்றம் கண்டது.
கவி இரவீந்திர நாத் தாகூர் அவர்களின் சாந்தி நிகேதனத்தின் புகழ் பரவத் தொடங்கிய காலம் அது. எனவே சாந்தி நிகேதனம் என்னும் பெயரைப் பின்பற்றி, இச்சங்கத்திற்கு வித்தியா நிகேதனம் என்று பெயர் சூட்டப் பட்டது. கரந்தை, வடவாற்றங்கரையில் அமைந்திருந்த பஞ்சநத பாவா மடத்தில் வித்தியா நிகேதனம் தொடங்கப் பெற்று, செயல்படத் தொடங்கியது.
அரசஞ் சண்முகநாரின் நண்பரும், தமிழ், ஆங்கிலம், வட மொழிகளில் சிறப்புற பயின்று, இம்மொழிகளை ஆராய்வதையே பொழுது போக்காகவும், விளையாட்டாகவும் மேற்கொண்டிருந்த, அரித்துவார மங்கலம் பெருநிலக் கிழாரும், பெரும் வள்ளலுமாகிய "•வா.கோபால சாமி இரகுநாத இராசாளியார்"• அவர்களே இச்சங்கத்தின் தலைவராவார். வி. சாமிநாத பிள்ளை செயலாளராவார்.
•அரசஞ் சண்முகநார், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், நீ.கந்தசாமி பிள்ளை, தட்சிணா மூர்த்தி பிள்ளை, கல்யாண சுந்தரம் பிள்ளை, பாலசுப்பிர மணிய பிள்ளை முதலானோர் இச்சங்கத்தின் உறுப்பினராவர்•.
•தமிழ்த் தாத்தா உ,வே.சாமிநாத அய்யர்• அவர்கள் பலமுறை இச்சங்கத்திற்கு வந்து, தங்கி தமிழாராய்ச்சியில் ஈடுபடுவதுண்டு. மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர் பாண்டித் துரை தேவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் இச்சங்கத்திற்குக் கிடைத்தது. இதன் விளைவாக வித்தியா நிகேதனம் சிறப்புடன் தமிழ்ப் பணியாற்றி வந்தது.இவ்விதம் பாண்டித்துரை தேவரின் முயற்சியில் தமிழ் தழைத்தோங்கியது.
No comments:
Post a Comment