Tuesday, August 15, 2017

நத்தக்கோட்டை படுகொலை!

நத்தக்கோட்டை படுகொலை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்திய மண்ணில் வெள்ளையர் நடத்திய  முதல் படுகொலை நெல்லைச் சீமையிலே நிகழ்த்தப்பட்டது.  நிகழ்த்தப்பட்ட இடம் நத்தக் கோட்டை . வரலாற்றின் இருண்ட பக்கங்களை புரட்டிப் பார்த்தால் சற்றுக் கலங்கலாக தெரியும் ஒரு பாளையம் தான் நத்தக் கோட்டை .

நத்தக் கோட்டை . நெல்லைச் சீமையிலே பாளையங்கோட்டையிலிருந்து சுமார் 36 மைல் தொலைவு தென் மேற்கேயும் , ஆரல்வாய்மொழியிலிருந்து சுமார் 6 மைல் கிழக்கேயும் அமைந்த ஒரு சிறு பாளையம்.

ஆர்க்காடு நவாபிடம் பெற்ற உரிமையின் காரணமாக பாளையக்காரர்களிடம்  வரி வசூல்  செய்யும் உரிமையை கும்பினியார் பெறுகின்றனர். பல பாளையக்காரர்களிடம்  வரி  வசூல் செய்ய முற்பட்டனர்.  இந்தச் சூழலில் 20-1-1754 அன்று தஞ்சையிலிருந்து இராமன் நாயக் என்பவன் சென்னை கோட்டைக்கு ஒரு மடல் எழுதுகிறான், " மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் தற்போது அறுவடைக் காலம் தொடங்குகிறது. நம் படைகளை அனுப்பினால் ஏராளமாக வசூல் வரும். தவறினால் மேலும் அடுத்த ஆண்டு வரை தாமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு எழுதுகிறான். கும்பினி மேலிடம் கர்னல்  அலெக்சாண்டர் ஹெரானையும், முகமதலியின் மூத்த சகோதரன் மாபூஸ்கானையும் வரி வசூல் செய்ய அனுப்புகின்றனர். இவர்கள் தலைமையில் கும்பினி படை தெற்குச் சீமை நோக்கி புறப்பட்டது.
மதுரை வந்த ஹெரானும் - மாபூஸ் கானும் படைகளுடன் நெல்லை நோக்கி பயணமாகின்றனர்.  சில பாளையங்கள் பணிந்து விடுகின்றன. பணியாத பாளையங்களின் மேல் படையெடுக்க  ஆயத்தமடைகின்றனர். அதற்குள் ஹெரானை திருச்சிக்கு புறப்பட்டு வருமாறு மேலிடத்தால்ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
ஆனால் ஹெரான், வரி வசூல் செய்ய கேப்டன் பீவர் (Beaver) தலைமையில் 100 வெள்ளையர்கள், 300 சிப்பாய்கள் மற்றும் இரண்டு பீரங்கிகளுடன் நத்தக் கோட்டைக்கு அனுப்பி வைக்கிறான்.

பீவரின் படை 18 மணி நேர பயணத்திற்குப் பிறகு நத்தக் கோட்டை வந்து சேர்கிறது . இதனை எதிர்பார்க்காத நத்தக் கோட்டை  பாளையக்காரர் தூதுவரை அனுப்பி சமாதானத்திற்கு முற்படுகிறார்.  வெள்ளையர் இதனை ஏற்காமல் தூது வந்த தூதுவனை சிறைப்பிடித்து விடுகின்றனர். கேட்ட தொகையை கொடுத்தால் தான் பிணைக்கைதியான தூதுவனை விட முடியும் என்று சொல்லி விடுகிறார்கள்.
கும்பினி படை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தூதுவன் தப்பி அரண்மனைக்கு சென்று விடுகிறான்.
அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த கும்பினிப் படை நத்தக் கோட்டை மீது தாக்குதல் தொடுக்கிறது.  வெள்ளையர் பட்டாளமும், நாட்டுச் சிப்பாய்களும் பல அணிகளாகச் சேர்ந்து அக்கோட்டை முழுவதும் நாசம் செய்தனர். ஆண், பெண், முதியவர், குழந்தைகள் என ஒரே மூச்சில் 394 பேரை படுகொலை செய்து முடித்தனர்.  அதோடு ஆடு, மாடு, குதிரைகள் போன்ற விலங்குகளையும் வெட்டிச் சாய்த்தனர். அங்கிருந்த தானியங்களை கொள்ளையடித்தனர். இந்திய வரலாற்றில் வெள்ளையர் நடத்திய முதல்  படுகொலை நத்தக் கோட்டைப் படுகொலை தான்.

இதைப் பற்றி இராபர்ட் ஆரம் (Robert Orme) தன்னுடைய History of Hindustan - 1861  என்ற நூலிலே எழுதுகிறார், " நாங்கள் வருந்துகிறோம். வருந்திக் கூறுகிறோம். இந்த முட்டாள்தனமான படுகொலைகள் புரிந்த படைகளும், அதிகாரிகளும் ஆங்கிலேயர்களே" என்றும் "கட்டவிழ்த்து விடப்பட்ட இரத்த வெறிக் கொடுமை" என்றும் பதிவு செய்கிறார்.

நண்பர்களே.'
வெள்ளையர் நடத்திய முதல் படுகொலையில்  தப்பிய அறுவர் - அந்த  நத்தக் கோட்டை வம்சாவளியினர் தப்பிச் சென்று கன்னியாகுமரி அருகிலுள்ள பஞ்சலிங்கபுரத்தில் வாழ்ந்து வருவதாக கால்டுவெல் கூறியுள்ளார்.

கோட்டைக்கருங்குளம்தான் பிரிட்டிஷ் ஆவணங்கள் குறிப்பிடும் நத்தக்கோட்டையாக இருக்கவேண்டும். நான் பஞ்சலிங்கபுரம் பகுதியில் களப்பணியாற்ற சிலரை ஒருவர் மூலமாக அனுப்பினேன். அங்கே அவர்கள் அளித்த தகவலின்படி பலர் தங்களது பகுதி சிங்கம்பட்டி ஜமீன் பகுதி என்கிறார்கள். கோட்டைக்கருங்குளம் ஊரினர் மிகுதியாக உள்ளனர். தப்பித்து சென்ற அறுவருடைய வம்சாவளியினரை கண்டறியும் முயற்சிகள் தொடர்கிறது

மறைக்கப்பட்ட எத்தனையோ வீர வரலாற்றில் நத்தக் கோட்டை படுகொலை முக்கியத்துவம் வாய்ந்தது.

......  மானமறவர்களின்  வீரவரலாற்றைத் தேடுவோம்......

ஆதாரம் :
I. Country Correspondences military Dept. 1755 .
2. Dairy and consultation of public Dept. 1755
3 History of Tinnavely Dist. By Dr. Coldwell
4. History of Hindustan by Robert orme, 1861
5. திருநெல்வேலி சீமைச் சரித்திரம் - குரு குகதாசப் பிள்ளை
6. Vestiges of Madras Vol. II - H.D. Love, 1913
7. Tinnaveli Dist. gazetters by H.R. Pate. 1917.

நன்றி :
பேசும் ஆவணங்கள்
எம். செந்தூர பாண்டியன்
மருதுபாண்டியன் இரா.

வேரை இழந்த மரங்களின் கதை

வேரை மறந்த மரங்களின் கதை:1
-^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^-

        இது வரலாற்றில் தமது பட்டங்களாலும், பிரிவாலும், தனித்தன்மையாலும், உண்மை முகத்தை தொலைத்த இனங்களின் வரலாறாகும்.  இதை முகநூலில் தொடராக எழுத எண்ணியுள்ளேன். ஒவ்வொரு இனமாக அலசுவோம். இதன் மூலம் தமிழக சாதிகள் தமது பழைய வரலாற்றை மீட்டெடுக்க மற்றும் அவர்களது உண்மை உறவுச்சாதியினரை அடையாளங்காணும் முயற்சியே அன்றி வேறெந்த காழ்ப்புணர்வும், பிரித்தாளும் கொள்கையோ அல்ல என்பதை முகநூல் வாசகர்கள் உணர்க.

சவளைக்காரர்:
- - - - - - - - - - - - - -
பரதவரில் ஒரு பிரிவான சவளைக்காரர் என்போர். இன்று பெருவாரியாக தம்மை சிறிதும் தொடர்பற்ற பள்ளி-வன்னியர் இனக்குழுவில் தொடர்புற்றவர்களாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்களின் சான்றுகள் பரவர் அல்லது பரதவர் எனும் மிகவும் பண்டைய தொல்குடி இனமாகிய திணைக்குடிகளின் வழியினராக சொல்கிறது. பரவரான இச் சாதியாருள் "வன்னியர்" என்பதும் ஒரு பட்டமாகும்.  இதை பிற்காலத்தில் "வன்னியர்" எனும் சாதிச்சான்றிதழ் பெற்ற ஒரு செயற்கையான குழுமத்தினர் சொல்லும் கதைகளை ஏற்றுக்கொண்ட 'அறிவுசாரா' சமூக மக்களின் அறியாமையால் தம்மை வன்னியன் என்றும்,  வன்னியகுல சத்திரியர் என்றும் எண்ணிக்கொண்டு தமது தாய்ச்சமூகமான பரதவரை விட்டு விலகிநிற்க ஆளாகின்றனர். கீழுள்ள சான்றுகள் எட்கர்தர்ஸ்டன் குறிப்புகளாகும்.

பரவர்-பரதவர் வெவ்வேறு அல்ல என்பதும் சவலைக்காரர் மற்றும் சலங்குகாரர் இருவரும் ஒத்த கூறுடையவர்கள் என்பதும் பரவரில் சவலைக்காரர் ஒரு வகையார் என்பதும் தெளிவு. எக்காலத்திலும் பள்ளி என்போர் பரவரிலோ, பரதவரிலோ,சவலைக்காரரிலோ வரவில்லை என்பதும் வன்னியர் என்றபெயர் பரவரான சவலைக்காரருக்கும் உண்டு என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெற்றென விளங்கும். இவர்கள் இன்று பா.ம.க. போன்ற கட்சிகளில் வன்னியர் எனும் பொதுப்பெயரால் இணைந்து தம் வேர்ச்சமூகத்தை அறியாமல் 'அக்னிகலச' குறியீட்டையும், அக்கட்சியின் கொடி வண்ணத்தை தமது சமூகத்தின் நிறமாகவும் எண்ணி வீணே மயங்குகின்றனர். மேலும் அறியாத சவளைக்காரர் பலரையும் படையாச்சி எனும் மற்றொரு பட்டங்கொண்டு நீவிர் பரதவரல்ல! , பரவரல்ல! , இன்னும் சவளைக்காரரே கூட அல்ல! , நீர் -வன்னியர், படையாச்சி என பட்டப்பெயரை சாதிப்பெயராக்கி சாதிக்கின்றனர். 

ஆகவே வேரை மறக்கும் மரங்கள் நாளடைவில் பட்டுப்போன வெறுங்கட்டைகளாகும். என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். இதையறிந்தாவது இனி வேரை நோக்கிய உங்கள் கவனத்தை திருப்பி அதை நீர்விட்டு பராமரிக்க வேண்டிய கடமை சவளைக்காரர் இனத்தவர்கள் செய்யவேண்டிய பணியாகும்.

            நாளை மற்றொரு வேரிழந்த மரத்தைப்பார்ப்போம்!      -தொடரும்!

அன்பன்: கி.ச.முனிராஜ் வாணாதிராயன்
                        '""""""""""""""""